உள்ளூர் செய்திகள்
திருநீலகண்டபுரம் டாஸ்மாக் கடை இடமாற்றம்- முதல்வருக்கு மனு
கொங்கு மெயின் ரோடு-டி.எஸ்.ஆர்., லேஅவுட் சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் திருநீலகண்டபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திருநீலகண்டபுரம், டி.எஸ்.ஆர்., லே அவுட் பகுதி பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-
கொங்கு மெயின் ரோடு - டி.எஸ்.ஆர்., லேஅவுட் சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. காலை முதல் இரவு வரை மதுக்கடையிலும் 24 மணி நேரமும் அதன் பாரிலும் மது விற்பனையும், குடிமகன்களின் கூட்டமும் உள்ளது. அருகேயுள்ள வீடுகள் முன்புறம், வீதிகளின் ஓரமும் மதுக்கடைக்கு வருவோர் அசுத்தம் செய்வது, வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவது.
இரவு நேரத்தில் அதிக சப்தத்துடன் வாகனங்களை இயக்குவது என தொந்தரவு உள்ளது. பெண்கள், குழந்தைகள் சாலையில் நடமாட முடியவில்லை. இதுகுறித்து கேட்டால் பொதுமக்களை மிரட்டுவது வாடிக்கையாக உள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை அடிக்கடி நேரிடுகிறது. இப்பகுதியினர் அமைதியாக வாழ வேண்டும் என்றால் இந்த மதுக்கடை இடமாற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.