உள்ளூர் செய்திகள்
மயில்கள் இறந்ததால் கைது செய்யப்பட்ட ராமருடன் வனத்துறையினர்

சாயல்குடி அருகே வயலில் இறந்து கிடந்த 6 மயில்கள்- விவசாயி கைது

Published On 2021-12-23 03:24 GMT   |   Update On 2021-12-23 03:24 GMT
சாயல்குடி அருகே வயலில் இறந்து கிடந்த 6 மயில்கள் தொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.
சாயல்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வனச்சரக அலுவலர்கள் ராஜா தலைமையில் வனவர் அன்புசெல்வம் வனப் பணியா ளர்களுடன் சாயல்குடி அருகே எஸ். கீரந்தை கிராமப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள விவசாய இடங்களின் அருகே 6 மயில்கள் இறந்து கிடந்ததை கண்டனர்.

விசாரணையில் நெல் பயிரை சேதம் விளைவிக்காதவாறு பறவைகள், விலங்குகளை தடுப்பதற்காக எஸ்.கீரந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமர் (வயது56) தனது விவசாய நிலத்தை சுற்றிலும் பூச்சிக்கொல்லி மருந்தினை கலந்து வைத்ததில் மயில்கள் அதனை தின்று இறந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத் துறையினர் ராமரை கைது செய்து கடலாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி முதுகுளத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் வனத்துறையினர் கூறுகையில், வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி அட்டவணை 1-ல் உள்ள தேசிய பறவையான மயிலை வேட்டையாடுவது, விஷம் வைத்துக்கொள்வதோ பிணையில் வர முடியாத குற்றமாகும். இதற்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

மேலும் மான், முயல் போன்ற வன உயிரினங்களையும், பறவைகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Tags:    

Similar News