சோழவரம் அருகே லாரி மோதி தந்தை-மகன் பலி
பொன்னேரி:
ஆந்திர மாநிலம் வெங்கடகிரியை சேர்ந்தவர் முனி சுந்தரம் (வயது 35). பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது மகன் சசி வரதனை (6) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பூந்தமல்லியில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சோழவரம் அடுத்த காந்தி நகர் அருகே 400 அடி சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முனிசுந்தரம், அவரது மகன் வரதன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தகவல் அறிந்ததும் சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிறுத்தாமல் சென்ற லாரி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.