உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

மருத்துவர் சாரதா மேனன் மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2021-12-06 07:17 GMT   |   Update On 2021-12-06 07:17 GMT
மன நோயாளிகளின் சிகிச்சையில், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தனி முத்திரை படைத்த சாதனையாளர் மருத்துவர் சாரதா மேனன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் உடல் நலக்குறைவால் தனது 98 வயதில் மறைவெய்தினார் என்ற துயரச்செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்குள்ளானேன்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயின்ற அவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மன நல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

மன நோயாளிகளின் சிகிச்சையில், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தனி முத்திரை படைத்த சாதனையாளர். அவர் சிறந்த மருத்துவர் மட்டுமல்லாது சிறந்த நிர்வாகத் திறனும் படைத்தவர். சென்னையில் அவர் நிறுவி இயங்கி வரும் ‘மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம்’ அவரது பங்களிப்புகளில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாகும். அவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

சிறந்த மருத்துவ சேவைக்காக தமிழ்நாடு அரசின் அவ்வையார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற சாரதா மேனன் மறைவு மருத்துவத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் உறவினர் களுக்கும், மருத்துவத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News