உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாவட்ட ஊராட்சிகளில் இயற்கை உரம் தயாரித்து விற்க திட்டம்
மக்கும் குப்பையை எளிதாக மக்க செய்யவும், துர்நாற்றத்தை தடுக்கவும் நுண்ணுயிர் திரவத்தை பயன்படுத்தலாம்.
திருப்பூர்:
மக்கள் தொகை அதிகம் உள்ள ஊராட்சிகளில் திடக்கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து இயற்கை உரம் தயாரித்து விற்கும் திட்டம் தொடங்க இருக்கிறது. அதன்படி தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில், சிறு உரக்கிடங்குகள் அமைக்கப்படுகின்றன.
கிடங்குகளில் பெயரளவுக்கு குப்பையை இருப்பு வைக்காமல் இயற்கை உரம் தயாரித்து விற்பதன் மூலம் வருவாய் ஈட்டலாம். குப்பை பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
மக்கும் குப்பையை எளிதாக மக்க செய்யவும், துர்நாற்றத்தை தடுக்கவும் நுண்ணுயிர் திரவத்தை பயன்படுத்தலாம். 100 லிட்டர் டிரம்மில் குளோரின் கலக்காத 90 லிட்டர் தண்ணீரை ஊற்றி 5 கிலோ நாட்டு வெல்லம், இரண்டு லிட்டர் புளித்த தயிர் ஆகியவற்றை கொண்டு நுண்ணுயிர் திரவம் தயாரிக்கலாம். தண்ணீரில் வெல்லம், தயிர் ஆகியவற்றை கலந்து 7 நாட்கள் வைக்க வேண்டும்.
பிறகு தலா 5 கிலோ உமி, தவிடு கலந்து உருண்டையாக மாற்றிக் கொள்ளலாம். இவற்றை உரத்தொட்டிகளில் குப்பையுடன் கலந்து மூடி வைக்கலாம். துர்நாற்றம் வீசாமல் தடுக்க ஒரு லிட்டர் நுண்ணுயிர் திரவ உரத்தை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து தொட்டியின் உள்பக்கம் தெளிக்கலாம்.
குப்பைகள் மக்கியதும், அவற்றை சாக்குப்பையில் எடுத்து வைத்துக் கொண்டு ஊராட்சி நிர்வாகம் நிர்ணயிக்கும் விலைக்கு விற்பனை செய்யலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.