உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் கல்விக்கடன் சிறப்பு முகாம் - நாளை நடக்கிறது
முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் நாளை 4-ந்தேதி (சனிக்கிழமை) கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமானது திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டரங்கில் நாளை 4-ந்தேதி காலை 10 முதல் 4 மணி வரையில் நடைபெறுகிறது.
கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். இதன் பிறகு முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.
மேலும் விண்ணப்ப நகல், மாணவர்கள், பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தக நகல், வருமானச்சான்று, ஜாதிச்சான்று, பான் அட்டை ஆகியவற்றின் நகல், கல்விக் கட்டண விவரம், பத்தாம் வகுப்பு, பிளஸ்-2, இளநிலைப் படிப்பின் மதிப்பெண் சான்றிதழ், முதல் பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றிதழ், கலந்தாய்வு மூலம் பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை ஆகிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.
இதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்து கொண்டு மாணவர்களின் விண்ணப்பங்களை பெற்று கல்விக்கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.