செய்திகள்
இரவு நேரங்களில் வனவிலங்குகள் குடியிருப்புக்குள் வரும் போது அவற்றை இருளில் எதிர்கொள்ள முடியாமல் மலைவாழ் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை:
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில் செட்டில்மென்ட் எனப்படும் 15 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளுக்கு மின்வசதி ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்பதால் சோலார் பேனல்கள் வாயிலாக தெருவிளக்குகள் அரசால் அமைத்து தரப்பட்டன.
இவை வழங்கப்பட்டு பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்காததால் பழுதடைந்து மலைவாழ் கிராமங்கள் இருளில் மூழ்குவது தொடர்கதையாகியுள்ளது.
வீடுகளுக்கு அளிக்கப்பட்ட சோலார் பேனல்களும் பழுதடைந்துள்ளதால் மக்கள் தவிக்கின்றனர்.இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனவிலங்குகள் குடியிருப்புக்குள் வரும் போது அவற்றை இருளில் எதிர்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
பல்வேறு சிறப்புத்திட்டங்களின் கீழ் புதிய சோலார் பேனல்கள் வழங்க வேண்டும். பழுதடைந்துள்ள பேனல்களை புதுப்பித்து தர வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தை மலைவாழ் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.