செய்திகள்
திருமக்கோட்டை அருகே ஓட்டலில் தகராறு- 4 பேர் கைது
திருமக்கோட்டை அருகே ஓட்டலில் தகராறு செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருமக்கோட்டை:
திருமக்கோட்டை அருகே உள்ள தெற்கு தென்பரை கிராமத்தில் ஒட்டல் நடத்தி வருபவர் வடிவேலு( வயது60). இவருக்கு உதவியாக இவரது மனைவி அள்ளி, மகன் ரஞ்சித் ஆகியோர் உள்ளனர். சம்பவத்தன்று பக்கத்து கிராமமான பாலையூரை சேர்ந்த அஜித்(20), சுரேஷ்( 40) பிரகாஷ்(34), தர்மேந்திரன்(35), தினேஷ் சத்யானந்தன் ஆகியோர் வடிவேலுவின் ஓட்டலில் சாப்பிட்டனர். அப்போது அவர்கள் சாப்பிட்ட தட்டிலேயே கையைக் கழுவி உள்ளனர். இதை வடிவேல் மகன் ரஞ்சித் தட்டிக்கேட்டார்.
அப்போது அவர்கள் ரஞ்சித்தை கீழே தள்ளினர். இதனால் மனவேதனை அடைந்த ரஞ்சித் திருமக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அஜித், சுரேஷ், பிரகாஷ், தர்மேந்திரன் உள்ளி்ட்ட 6 பேர் மறுநாள் ஓட்டலுக்கு வந்து மேஜைகளை தள்ளியும் அல்லியை கீழே தள்ளியும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அல்லி திருமக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித், சுரேஷ், பிரகாஷ், தர்மேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தினேஷ், சத்தியானந்தம் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.