செய்திகள்
சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக கோவையில் திடீர் மழை
கோவையில் நேற்று இரவு திடீரென சாரல் மழை பெய்தது. இதனால் அனலாக தகித்த வெப்பம் சற்று குறைந்தது.
கோவை:
கோடை காலம் கடந்த மார்ச் முதல்வாரத்தில் தொடங்கியது. தொடங்கிய நாளில் இருந்து வெயில் படிப்படியாக அதிகரித்து வாட்டி வதைத்தது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்பட்டனர்.
கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 99.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இரவு நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். குறிப்பாக நோயாளிகள், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கோவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு கோவையில் திடீரென சாரல் மழை பெய்தது. இதனால் அனலாக தகித்த வெப்பம் சற்று குறைந்தது. மழையால் கோவையில் குளிர்ச்சி நிலவியது. இது கோவை மக்களுக்கு ஆறுதல் அளித்தது. இன்றும் வெயில் குறைவாகவே இருந்தது.