செய்திகள்
தென்னம்பட்டி அருகே மண் அள்ளிய வாலிபர் கைது
தென்னம்பட்டி அருகே மண் அள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரையை அடுத்த தென்னம்பட்டி அருகே உள்ள முள்ளாம்பட்டி பகுதியில் வடமதுரை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது முள்ளாம்பட்டி குளத்தில் மர்ம நபர்கள் சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி, டிப்பர் லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது, லாரியுடன் அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பொக்லைன் டிரைவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் அன்னசவுடகவுண்டன்பட்டியை சேர்ந்த கார்த்திக்ராஜா (வயது 29) என்பது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்ராஜாவை கைது செய்து, பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.