செய்திகள்
மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதா மறைந்தது எப்படி? விடைகிடைக்காத நிலையில் நினைவிடம் திறப்பது அவசியமா ?- மு.க.ஸ்டாலின் கேள்வி

Published On 2021-01-28 13:33 GMT   |   Update On 2021-01-28 13:33 GMT
ஜெயலலிதாவின் மரணத்திற்கே இன்னும் விடை தெரியாத சூழலில், இந்த நினைவிடம் திறப்பு அவசியமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே திமுக தேர்தல் பணிக்குழுத் துணைத்தலைவர் சிவப்பிரகாசத்தின் பேரனின் திருமண விழாவில் நேற்று மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு நினைவிடம் திறக்கப்படுகிறது. இதை திறந்து வைப்பவர் ஊழல் விசாரணைக்கு உள்ளவர். 4 வருடமாகியும் ஜெயலலிதா ஏன் மறைந்தார் ? எப்படி மறைந்தார் ? என்று ஒரு தர்மயுத்தம் நடைபெற்றது. தர்மயுத்தம் நடந்து 48 மாதங்கள் ஆகிவிட்டது. இதன் பின் ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.

விசாரணை ஆணையம் அமைத்து கிட்டத்தட்ட 42 மாதங்கள் ஆகிவிட்டது. யார் விசாரணை வேண்டும் என்று கேட்டவர் என்றால் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தான். வேறு யாரும் கேட்க வில்லை. அவர் விசாரணை கமிஷனில் ஆஜராக வேண்டும் என்று 25 மாதம் ஆகிவிட்டது.8 முறை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதுவரை ஆஜராக வில்லை. இதில் ஆறுமுகசாமி கமிஷனின் காலக்கெடு 10-வது மாதமாக நீட்டிக்கப்படுகிறது.ஆனால் இதுவரை ஜெயலலிதா மரணத்தின் உண்மை வெளிவரவில்லை. ஜெயலலிதாவின் மரணத்திற்கே இன்னும் விடை தெரியாத சூழலில், இந்த நினைவிடம் திறப்பு அவசியமா? என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

Similar News