செய்திகள்
உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி- வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார்
மின்கம்பியில் பஸ் உரசியதில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியை வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார்.
திருக்காட்டுப்பள்ளி:
திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூரில் கடந்த 12-ந்தேதி சாலையோரத்தில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள் மீது பஸ் உரசியதால் 4 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. அதன்படி மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தலா ரூ. 5 லட்சம் காசோலையை நேரில் சென்று வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார்.
அப்போது அவருடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், ஆர்.டி.ஓ. வேலுமணி, மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் விஜயகவுரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப்பிரமணியன், ரெத்தினசாமி, திருவையாறு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் இளங்கோவன், நீலமேகம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், மின் வாரிய அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
முன்னதாக இழப்பீடு காசோலையை பெற்றுக்கொண்ட கருப்பூர் கணேசன் மனைவி மல்லிகா தனக்கு அரசு வீடுகட்டித்தரவேண்டும் என்றும், தனது மகனுக்கு அரசு வேலை தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.