செய்திகள்
கொளத்தூரில் மழைநீரில் நடந்து சென்று ஆய்வு செய்த மு.க.ஸ்டாலினை படத்தில் காணலாம்.

கொட்டும் மழைக்கு மத்தியில் மக்களை சந்தித்த முக ஸ்டாலின்- உணவு பொருட்களை வழங்கினார்

Published On 2020-11-25 20:00 GMT   |   Update On 2020-11-25 20:00 GMT
கொட்டும் மழைக்கு மத்தியில் மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி உணவு பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:

நிவர் புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழையும், புயல் காற்றும் வீசி வருகிறது. தொடர்ந்து கொட்டி வரும் மழையால் சென்னை மிதக்கிறது.

இந்த நிலையில், மழையால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். கொட்டும் மழைக்கு மத்தியில், மழைநீரில் நடந்து சென்று, மக்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு உணவு பொருட்கள் உள்ளிட்ட நல உதவிகளையும் வழங்கினார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் முகநூலில் கூறியிருப்பதாவது:-

எப்போதும் மக்கள் பணியாற்றும் பேரியக்கமான தி.மு.க. நிர்வாகிகள், மக்களுக்குத் தேவையான உதவிகளையும் பேரிடர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகளையும் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்போது முதலில் நமக்குத் தேவை மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது என்பதை மனதில் கொண்டு தீவிரப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

ஏறத்தாழ 9 மாதங்களாக கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தப் புயல் மழைச்சூழல் அந்த நோய்த் தொற்றின் இரண்டாம் அலைக்குக் காரணமாகி விடக்கூடாது. தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் உரிய மருத்துவ முறைகளை கையாண்டு, மக்களை காத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News