செய்திகள்
கைது

பட்டாசு வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு- 2 பேர் கைது

Published On 2020-08-29 10:18 GMT   |   Update On 2020-08-29 10:18 GMT
திருமண நிச்சயதார்த்த விழாவில் பட்டாசு வெடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே முள்ளுகுடி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயியான இவருக்கும், அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இதனால் திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு மாரியப்பனின் உறவினர்கள் சீர்வரிசை செய்யும் விழா முள்ளுக்குடியில் நடந்தது. அப்போது அவரது உறவினர்கள் சீர்வரிசை விழாவில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அப்போது வெடித்த வெடியில் அருகில் நின்று கொண்டிருந்த குத்தாலம் மாதிரிமங்கலத்தை சேர்ந்த செந்தில் மகன் சக்தி(வயது 6), முள்ளுக்குடி பகுதியை சேர்ந்த நடராஜ் மகன் பிரவீன் (வயது 6) ஆகிய 2 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சக்தி பரிதாபமாக இறந்தான். படுகாயம் அடைந்த பிரவீன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த நிலையில் வெடி வாங்கிச்சென்ற திருவாலங்காடு காவிரி நகரை சேர்ந்த சின்னதுரை(58), வெடிகளை விற்பனை செய்த திருவாலங்காடு மெயின் ரோட்டை சேர்ந்த பாண்டியன் (62) ஆகிய இருவரை பந்தநல்லூர் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சந்திரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News