செய்திகள்
குடிநீர் தட்டுப்பாடு

கொடைக்கானல் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்

Published On 2020-06-21 08:09 GMT   |   Update On 2020-06-21 08:09 GMT
கொடைக்கானல் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் பகுதியில் போதிய மழை பெய்யாததால் குடிநீர் வழங்கும் ஏரி, அணைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், நகரை ஒட்டியுள்ள வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சிநகரில் 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் சீராக குடிநீர் வழங்கக்கோரி குறிஞ்சிநகரை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த ஊராட்சி உறுப்பினர்கள், போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களை சிறைபிடித்து பெண்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார், அங்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் குடிநீர் வழங்கப்படும் எனவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் மூலம் நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News