மு.க.ஸ்டாலின் மக்கள் சேவையை மறந்து கொரியர் சேவை தொடங்கி விட்டார்- அமைச்சர் தாக்கு
மதுரை:
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் இருக்கிறது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் போர்க்கால நடவடிக்கை காரணமாக கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இறப்பு விகிதம் குறைந்து வருவதுடன், நோயால் பாதிக்கப்பட்ட 56 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் 4 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிகிறது. தமிழக மக்கள் முழு வாழ்வாதாரத்தையும் மீட்கும் வகையில் நாளை முக்கிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட உள்ளார்.
அ.தி.மு.க. அரசு மக்கள் பணியில் 100 சதவீதம் ஈடுபட்டு வரும் நிலையில் திராவிட இயக்க வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதற்காக நான் இருக்கிறேன் என்பதை மக்களிடம் காட்டிக் கொள்வதற்காக மக்கள் சேவையை மறந்து விட்டு அரசியல் காரணங்களுக்காக கொரியர் சேவையை மு.க. ஸ்டாலின் தொடங்கி உள்ளார். மக்கள் எதிர்பார்ப்பது மக்கள் சேவையே தவிர, கொரியர் சேவை அல்ல.
தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் வந்தால் அதனை எதிர்கொள்ள வேண்டிய நடைமுறை குறித்து வேளாண்மை துறை சார்பில் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே வெட்டுக்கிளிகள் பற்றி யாரும் அச்சப்படத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.