செய்திகள்
கமல்ஹாசன்

‘டாஸ்மாக்’ மூடல்- சமூக வலைதளங்களில் கமல்ஹாசனுக்கு பெருகும் ஆதரவு

Published On 2020-05-09 07:27 GMT   |   Update On 2020-05-09 07:27 GMT
ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் தீர்ப்பு மூலம் கமல்ஹாசனுக்கு சமூகவலைதளங்களிலும், பெண்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிகின்றன.
சென்னை:

‘டாஸ்மாக்’ திறப்பு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அதுவரை நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிடக்கோரியும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளரும், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான மெளரியா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர்.

நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும், சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.’ என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கால் கமல்ஹாசனுக்கு சமூகவலைதளங்களில் ஆதரவும், பாராட்டுகளும் குவிகிறது.

கொரோனா ஊரடங்கு தொடங்கியது முதலே கமல்ஹாசன் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

குறிப்பாக டாஸ்மாக் கடைகளை திறக்கும் வி‌ஷயத்தில் கடந்த 2,3 நாட்களாக தொடர்ந்து விமர்சித்து வந்தார். வெறும் விமர்சனத்துடன் நின்று விடாமல் நீதிமன்றத்தை நாடி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இந்த வழக்கின் தீர்ப்பு மூலம் கமல்ஹாசனுக்கு சமூகவலைதளங்களிலும் பெண்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிகின்றன.
Tags:    

Similar News