செய்திகள்
மேட்டுப்பாளையம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
கூட்டு குடும்பமாக வாழ பிடிக்காததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே உள்ள உமாபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி நந்தினி (வயது25). இவர் சூலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் படித்து வந்தார். மணிகண்டன் பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வாழ்வது நந்தினிக்கு பிடிக்கவில்லை. இதனால் மணிகண்டனிடம் தனிக்குடித்தனம் செல்லலாம் என அடிக்கடி கூறி வந்தார். ஆனால் மணிகண்டன் மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த நந்தினி வாழ்க்கையில் விரக்தியடைந்து விஷத்தை குடித்தார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு வருடத்தில் நந்தினி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருகிறது.