செய்திகள்
கோப்பு படம்

மதுரை ரெயில் நிலையத்தில் 250 பேருக்கு நள்ளிரவில் பரிசோதனை

Published On 2020-03-23 16:01 GMT   |   Update On 2020-03-23 16:01 GMT
கொரோனா வைரஸ் பரவலையடுத்து மதுரை ரெயில் நிலையத்தில் 250 பேருக்கு நள்ளிரவில் பரிசோதனை செய்யப்பட்டது.
மதுரை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு மதுரை கோட்டத்தில் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் அனைத்தும் வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நிஜா முதீன், கன்னியாகுமரி, திருக்குறள் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12642) மற்றும் மும்பை தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.11021) ஆகிய 2 ரெயில்கள் அதிகாலை 2 மணி அளவில் மதுரை வந்து சேர்ந்தன.

அதில் பயணம் செய்த 250 பயணிகளுக்கு ரெயில்வே மருத்துவக்குழுவினர் தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட பிரத்யேக சாதனங்களுடன் பரிசோதனை செய்தனர். இதில் அவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. அதன் பிறகு 250 பேரும் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மதுரை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை பரிசோதிக்க தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த ஜனவரி 28-ந்தேதி முதல் மதுரைக்கு விமானங்களில் வந்த துபாய், இலங்கை, சிங்கப்பூர் பயணிகளையும் வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து மதுரை வந்த வெளிநாட்டு பயணிகளையும் கொரோனா பரிசோதனை செய்தனர்.

இதுவரை 20 ஆயிரத்து 386 பயணிகளை பரிசோதனை செய்துள்ளனர். சின்ன உடைப்பு கொரோனா சிறப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள 5 பயணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News