செய்திகள்
கொலை

ராஜபாளையத்தில் கட்டிட தொழிலாளி கொலை

Published On 2020-03-17 08:11 GMT   |   Update On 2020-03-17 08:11 GMT
ராஜபாளையத்தில் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையம் பின்புறம் ஜவுளிக்கடை பஜார் செயல்பட்டு வருகிறது. இங்கு பகல் நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று காலை ஜவுளிக்கடை பஜார் வீதிக்கு பலரும் வந்தனர். அப்போது அங்கு ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

அவரது தலையில் கல்லைப்போட்டு முகத்தை யாரோ சிதைத்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய கல் அங்கேயே கிடந்தது.

இது குறித்து தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற தீவிர விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ராஜபாளையம் எம்.ஆர்.நகரைச் சேர்ந்த சமுத்திரபாண்டி (வயது 45) என தெரியவந்தது.

கட்டிட தொழிலாளியான இவரை கொலை செய்தது யார்? என்பது மர்மமாக உள்ளது. மது போதையில் ஏற்பட்ட தகராறில் உடன் சென்றவர் தலையில் கல்லைப்போட்டு கொன்றார்களா? அல்லது வேறு காரணங்களால் கொலை நடந்துள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News