யாராக இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டும்- நடிகர் சரத்குமார் பேட்டி
வேடசந்தூர்:
சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவரும், நடிகருமான சரத்குமார் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இதில் குறை இருப்பதாக தெரிந்தால் நேரடியாக பிரதமரையோ அல்லது தமிழக முதல்வரையோ சந்தித்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
ஒரு சட்டம் ஏற்றப்பட்டு விட்டது என்றால் அதை மதிக்க வேண்டும். போராட்டத்தை தூண்டி விடக்கூடாது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கான தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்பட்டு கொரோனாவில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும். டெல்லி கலவரத்தை மறைப்பதற்காகவும், போராட்டத்தை ஒடுக்குவதற்காகவும் கொரோனோ தடுப்பு நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது என்று கூறுவது ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.