திருமணத்துக்கு வற்புறுத்திய நர்சுக்கு கொலை மிரட்டல்- பூக்கடை வியாபாரி கைது
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ஆனந்தி (வயது 20). இவர் நர்சிங் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இவரது உறவினர் மஞ்சினி நகரை சேர்ந்தவர் கோபி. இவர் பெரிய மார்க்கெடடில் பூக்கடை நடத்தி வருகிறார்.
ஆனந்தி உறவினர் என்பதால் அவரது வீட்டுக்கு கோபி அடிக்கடி சென்று வருவார். இதில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
தனிமையில் இருவரும் சந்தித்து பேசும்போது திருமணம செய்வதாக கூறி ஆனந்தியிடம் கோபி உல்லாசம் அனுபவித்து வந்தார். இதில் ஆனந்தி 3 மாத கர்ப்பமானார்.
இதையடுத்து ஆனந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கோபியிடம் வற்புறுத்திய போது, தனது அண்ணனுக்கு திருமணம் முடிந்த பிறகு பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கோபி கூறி வந்தார்.
ஆனால், திருமணத்துக்கு முன்பே குழந்தை பிறந்து விட்டால் அவமானமாகி விடுமே என கருதிய ஆனந்தி நேற்று முன்தினம் கோபியின் வீட்டுக்கு சென்று உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு கோபியிடமும், அவரது குடும்பத்தினரிடமும் வற்புறுத்தினார்.
அப்போது கோபி மற்றும் அவரது உறவினர்கள் முத்து, லதா, சண்முகம் ஆகியோர் கதவை அடைத்து விட்டு ஆனந்தியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். மேலும் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து ஆனந்தி முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ் பெக்டர் ஜெய்சங்கர், சப்- இன்ஸ் பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்குபதிவு செய்து கோபியை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.