செய்திகள்
கொலை

பாகூர் அருகே மதுக்கடை ஊழியர் அடித்துக்கொலையா?- போலீசார் விசாரணை

Published On 2020-02-28 09:21 GMT   |   Update On 2020-02-28 09:21 GMT
பாகூர் அருகே மதுக்கடை ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாகூர்:

நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு கிராமம் கம்பர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாக பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் உள்ள தனியார் மதுபான கடையில் தங்கி சப்ளையராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சுப்பிரமணி சோரியாங்குப்பத்தில் சாராயக்கடையின் பின்புறம் உள்ள வயலில் இறந்து கிடப்பதாக அவருடன் மதுக்கடையில் வேலை பார்க்கும் அய்யப்பன் என்பவர் சுப்பிரமணியின் குடும்பத்தினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சுப்பிரமணியின் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது முகத்தில் ரத்தக் காயங்களுடன் சுப்பிரமணி இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து சுப்பிரமணியின் மகன் முருகன் பாகூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் தனது தந்தையை யாரேனும் அடித்து கொலை செய்து வயல்வெளியில் உடலை வீசி சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை யாரேனும் அடித்து கொன்றார்களா, அல்ல குடிபோதையில் தவறி விழுந்து இறந்து போனாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News