களக்காடு:
நெல்லை பழைய பேட்டை சர்தார்புரம் காந்திநகரை சேர்ந்தவர் தங்ககுமார் (40). இவர் தனது மனைவி முத்துசெல்வியுடன் பழைய பேட்டையில் வசித்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன் தங்ககுமார், முத்து செல்வியின் ஊரான களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் தச்சன்குளத்திற்கு வந்து அங்கு தங்கி கூலி தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 18-ந்தேதி தங்ககுமாரை பார்ப்பதற்காக அவரது அண்ணன் மாரியப்பன் தச்சன்குளத்திற்கு சென்றார். ஆனால் அங்கு தங்ககுமார் இல்லை.
இதுபற்றி தங்ககுமாரின் மாமியார் குடும்பத்தினரிடம் மாரியப்பன் கேட்டதற்கு தங்ககுமார் மனைவியுடன் தெற்கு புளியங்குளத்திற்கு சென்று விட்டதாக கூறி உள்ளனர். இதையடுத்து மாரியப்பன் தெற்கு புளியங்குளத்திற்கு சென்று விசாரித்த போது தங்ககுமார் அங்கும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாரியப்பன் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தங்ககுமாரை தேடி வருகின்றனர்.