7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார்- சிவி சண்முகம் பேட்டி
விழுப்புரம்:
விழுப்புரத்தில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டுவதற்கு ரூ.4½ அரை கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் சி.வி சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்று அரசு எதிர்பார்க்கின்றது.
இந்த விவகாரத்தில் நளினியை தவிர்த்து, பிறரை தூக்கிலிடலாம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சியினரெல்லாம், வெறும் வாயால் முழம் போட்டுக் கொண்டு விமர்சித்து பேசுகின்றனர்.
7 பேர் விடுதலைக்காக தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத அவர்கள் இதுபற்றி பேசுவதற்கு எதற்கும் தகுதி இல்லாதவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.