செய்திகள்
கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2020-02-07 10:04 GMT   |   Update On 2020-02-07 10:04 GMT
திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த 2 பெண்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு அணைக்காடு பிரிவு அருகே கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி வடக்கு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது 2 மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மாயி(வயது 32), தேனி கீழ கூடலூரை சேர்ந்த தமிழ்செல்வி(43), திருச்சி செல்லூரை சேர்ந்த ரோஸ்லின்(22) என்பதும், இவர்கள் திருப்பூர் காங்கேயம் ரோடு புதுப்பாளையம் பிரிவு பகுதியில் குடியிருந்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 51 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் பத்ரி நாராயணன் பரிந்துரையின் பேரில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். அதன்படி இதற்கான உத்தரவு நகலை திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், கோவை சிறையில் உள்ள மாயி, தமிழ்செல்வி, ரோஸ்லின் ஆகியோரிடம் வழங்கினார்.

Tags:    

Similar News