செய்திகள்
தற்கொலை

கடன் தொல்லை: கணவன்-மனைவி தற்கொலை

Published On 2020-01-18 05:53 GMT   |   Update On 2020-01-18 05:53 GMT
கடையத்தில் கடன் தொல்லை காரணமாக கணவன், மனைவி, மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆழ்வார்குறிச்சி:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார் குறிச்சியை அடுத்துள்ள கீழ ஆம்பூர் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 52). இவர் மோட்டார் சைக்கிளில் கடை கடையாக சென்று மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார்.

இவருடைய மனைவி லட்சுமி (47). இவர் பொட்டல் புதூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஜோதி என்ற மகளும், ஆரோக்கிய ஸ்ரீதர் என்ற மகனும் உள்ளனர். ஜோதி ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். ஆரோக்கிய ஸ்ரீதர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சந்தானத்திற்கு கடன் தொல்லை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சந்தானம், லட்சுமி, ஆரோக்கிய ஸ்ரீதர் ஆகிய 3 பேரும் வி‌ஷம் குடித்துவிட்டு உயிருக்கு போராடியபடி மயங்கி கிடந்தனர்.

இதனை பார்த்த சந்தானத்தின் மகள் ஜோதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்தானம் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து ஸ்ரீதருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலன் அளிக்காமல் அவரும் உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News