பீளமேடு அருகே வீடு புகுந்து பெண் முகத்தில் மிளகாய் ஸ்பிரே அடித்து திருட முயன்ற வாலிபர் கைது
கோவை:
கோவை ஆவாரம்பாளையம் அருகே உள்ள ராமசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி லிங்கம்மாள் (வயது 31). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்குள் ஏதோ சத்தம் வருவதை உணர்ந்த லிங்கம்மாள் எழுந்து வந்து பார்த்தார். வீட்டிற்குள் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனடியாக அந்த வாலிபர் தான் மறைத்து வைத்து இருந்த மிளகாய் ஸ்பிரேயை எடுத்து லிங்கம்மாளின் முகத்தில் அடித்து விட்டு வெளியே ஓடினார். எரிச்சல் தாங்க முடியாமல் லிங்கம்மாள் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தப்பி ஓடிய வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் சிவானந்தா காலனி அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்த சேகர்பாபு (29) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.