செய்திகள்
தற்கொலை

கொடைக்கானலில் காதல் தோல்வியால் 2 பேர் தற்கொலை

Published On 2020-01-09 10:09 GMT   |   Update On 2020-01-09 10:09 GMT
கொடைக்கானல் மற்றும் மதுரையைச் சேர்ந்த வாலிபர்கள் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டனர்.

கொடைக்கானல்:

மதுரை நாகமலைப்புதுக்கோட்டை சத்ய சாய் நகரைச் சேர்ந்தவர் நியாஸ் அலிகான் (29). இவர் அங்குள்ள மருந்துக்கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவரைத் திருமணம் செய்ய பெற்றோரிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து கொடைக்கானல் வந்த அவர் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது அதிகமான தூக்க மாத்திரையை தின்று முதலியார்புரம் பகுதியில் உள்ள சாலையில் மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்ட கொடைக்கானலைச் சேர்ந்த அவரது உறவினர் ஒருவர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை கிராமம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனின் மகன் விஜய் (22) அப்பகுதியைச்சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனை பெற்றோரிடம் தெரிவித்து சிறுமியை திருமணம் செய்து வைக்க வலியுறுத்தியுள்ளார். சிறுமிக்கு 18 வயது பூர்த்தியானதும் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த விஜய் விவசாயத்திற்கு பயன்படும் பூச்சி மருந்தை அருந்தி உயிருக்கு போராடி நிலையில் அப்பகுதியில் கிடந்துள்ளார். அவரைக் கண்ட அப்பகுதியினர் பெற்றோருக்கு தெரிவித்து கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News