பாபநாசம் ரெயில் நிலையம் திடலில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் மரக்கன்றுகள் சேதம்
பாபநாசம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி சார்பில் ஜல் சக்தி அபியான் மரம் நடும் திட்டத்தின் கீழ் பாபநாசம் ரெயில் நிலையம் அருகில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வேலி அமைத்து இருந்தனர்.
சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணத்தால் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது, மழைநீர் தேக்கத்தால் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் பல அழுகி விட்டன. மீதமுள்ள ஒருசில மரக்கன்றுகளும் அழுகும் நிலை உள்ளது.
இந்த இடங்களில் சமூக ஆர்வலர்கள் இயற்கையை நேசிப்பவர்கள் அடிக்கடி மரக்கன்றுகள் நடுகிறார்கள், நடப்படும் மரக்கன்றுகள் சேதம் ஆகிக்கொண்டே இருக்கின்றன. தண்ணீர் வடிவதற்கான பாதைகள் இருந்தும் சரிவர பராமரிக்கப்படாத காரணத்தினால் இங்கு நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் அழுகுவதைப் பார்த்து ரெயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள், இயற்கையை நேசிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனைப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை நீர் வடிய விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.