கோவை அருகே தனியார் நிறுவனத்தில் பணம் கொள்ளை
சூலூர்:
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரி மலையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் அப்பகுதியில் அர்ச்சனா எண்டர் பிரைசஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தை நேற்று இரவு ஊழியர்கள் வேலை முடிந்து பூட்டி சென்றனர்.
இன்று காலை அதனை திறக்க வந்தனர். அப்போது நிறுவனத்தின் முன் பக்க ஷட்டர் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.
கல்லா பெட்டியை பார்த்த போது அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 20 ஆயிரம் ரொக்கப்பணம், சில்லறை நாணயங்கள் கொள்ளை போய் இருந்தது. இது குறித்து அந்நிறுவன உரிமையாளர் சுல்தான்பேட்டை போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினசாமி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இந்த நிறுவனத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. அதனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு வட மாநில வாலிபர்கள் 2 பேர் கடைக்குள் நுழையும் காட்சி பதிவாகி இருந்தது.
அதில் ஒரு வாலிபர் முகத்தை துணியால் மூடி இருந்தது தெரிய வந்தது. கண்காணிப்பு கேமிராவில் பதிவான கொள்ளையர்களின் உருவங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் நிறுவனத்தில் கொள்ளை நடைபெற்ற சம்பவம் செஞ்சேரி மலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.