செய்திகள்
கோப்பு படம்

கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவியை கடத்த முயற்சி - காரில் வந்த 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2019-12-17 12:17 GMT   |   Update On 2019-12-17 12:17 GMT
கிருஷ்ணகிரியில் காரில் வந்து கல்லூரி மாணவியை கடத்த முயற்சி செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையைச் சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 19). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் உயிர் வேதியியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

தினமும் ராயக்கோட்டையில் இருந்து பஸ்சில் கிருஷ்ணகிரி வந்து கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். இன்று காலை வழக்கம்போல் பஸ்சில் வந்து ராயக்கோட்டை சாலையில் இறங்கி கல்லூரிக்கு மேம்பாலம் வழியாக ஒரு தனியார் பள்ளி முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இனோவா காரில் வந்த 6 பேர் கும்பல் மாணவியை கடத்த முயன்றது. மாணவியின் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் அங்கு ஓடிவந்தனர். அவர்களை கண்டதும் அந்த கும்பல் காரில் தப்பிச் சென்றுவிட்டது.

மாணவியை அந்த கும்பல் இழுத்தபோது மாணவி மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதனால் பொதுமக்கள் அவருக்கு முதலுதவி செய்து கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மாணவியை கடத்த முயன்றது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மாணவி நடந்து சென்ற பாலம் அருகே தனியார் பள்ளி உள்ளது.

இந்த பள்ளி பகுதியிலும் ரோட்டிலும் போலீசார் கண்காணிப்பு காமிரா அமைத்துள்ளனர். அந்த காமிராக்களில் மாணவியை கடத்த முயன்ற சம்பவமும், காரின் எண்ணும் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மாணவி கல்லூரிக்குள் இருப்பதால் அவரிடம் இன்று மாலை விசாரணை நடைபெற உள்ளது. மேலும் மாணவியின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடைபெற உள்ளது.
Tags:    

Similar News