செய்திகள்
வம்பாகீரப்பாளையத்தில் தனியார் நிறுவன ஊழியருக்கு சரமாரி கத்திகுத்து- 4 பேருக்கு வலைவீச்சு
வம்பாகீரப்பாளையத்தில் தனியார் நிறுவன ஊழியரை சரமாரியாக கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிஷோர் (வயது22). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் அங்குள்ள அரசு பள்ளி அருகே நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த திப்புராயப்பேட்டை ஆரோக்கிய மாதா கோவில் தெருவை சேர்ந்த திப்லான் (22) மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் கிஷோரை இங்கு வந்து எப்படி நிற்கலாம் என கேட்டு தகராறு செய்தனர். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கிஷோரை சரமாரியாக குத்தினர். அதோடு கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் தலை மற்றும் நெற்றியில் பலத்த காயம் அடைந்த கிஷோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிவு செய்து திப்லான் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.