பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 2 பேர் கைது
போரூர்:
சாலிகிராமம் காந்தி நகர் தமயந்தி தெருவைச் சேர்ந்தவர் சங்கர். கார் பென்டர். இவரது மனைவி மகாலட்சுமி.
கடந்த ஜூலை மாதம் சங்கர் வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பினார். அப்போது மகாலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து மகாலட்சுமியிடம் விசாரித்த போது, ஹரிஷ்குமார் என்பவர் தனக்கு நண்பராக அறிமுகமானதாகவும் அவரது வீட்டிற்கு சென்ற போது மயக்க சாக்லேட் கொடுத்து பாலியல் கொடுமை செய்து நகையை பறித்து விட்டதாக தெரிவித்தார்.
மேலும் தன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்து கொண்டு அவரது நண்பர் ரமேஷ்குமார் என்பவருடன் சேர்ந்து இருவரும் மிரட்டியதாகவும் கூறினார்.
இதுகுறித்து சங்கர் வடபழனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி விசாரணை நடத்தி ஹரிஷ்குமார், ரமேஷ் குமார் ஆகிய இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதுபற்றி அறிந்ததும் அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஹரிஷ்குமார், ரமேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.