பழனி அருகே தந்தை-மகனை தாக்கிய போலீசை கண்டித்து சாலை மறியல்
பழனி:
பழனி அருகே உள்ள வி.கே.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் சங்கர்கணேஷ் (வயது 24). மிட்டாய் வியாபாரி. இவருக்கும் பழனி தாலுகா போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் வேந்தன் என்பவருக்கும் ஒரு வழக்கு தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கர்கணேஷ் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, போலீஸ்காரர் வேந்தன், அவரை மறித்து ஆவணங்கள் உள்ளதா? என கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த சங்கர்கணேஷ் பழனி அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சங்கர்கணேசின் தந்தை ராதாகிருஷ்ணன் கேட்டபோது அவரையும் போலீஸ்காரர் தாக்கி உள்ளார்.
இதனால் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தாராபுரம் சாலையில் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் மறியலில் ஈடுபட முயன்றார்.
அப்போது சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீசார் ஒருவர் கூறும்போது, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் வேந்தன் பழனி தாலுகாவுக்கு உட்பட்ட சாமிநாதபுரம் போலீஸ் நிலையத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டார் என்றார்.