செய்திகள்
கொலை

செங்குன்றம் அருகே லாரியில் பேட்டரி திருடிய டிரைவர் அடித்து கொலை - 3 பேர் கைது

Published On 2019-10-13 09:13 GMT   |   Update On 2019-10-13 09:13 GMT
செங்குன்றம் அருகே லாரியில் பேட்டரி திருடிய டிரைவர் அடித்து கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்குன்றம்:

மாங்காடு அருகே உள்ள கோவூரை சேர்ந்தவர் முரளி (வயது 33). ஆட்டோ டிரைவர். கடந்த 7-ந் தேதி செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம், எல்லம்மன்பேட்டை பகுதியில் உள்ள மீஞ்சூர் - வண்டலூர் வெளி வட்ட சாலையில் ஆட்டோவில் முரளி இறந்து கிடந்தார்.

உடலில் காயங்கள் இல்லாததால் அவர் மாரடைப்பில் இறந்து இருக்கலாம் என்று முதலில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் முரளி அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து உடல் மீட்கப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் பட்டாபிராம் நவ ஜீவன் நகரை சேர்ந்த லாரி உரிமையாளர் மகேஷ், அவரது மைத்துனர் அருள் குமார், அவர்களது நண்பர் பட்டாபிராம் அண்ணா நகரை சேர்ந்த சம்பத் ஆகியோர் முரளியை அடித்து கொலை செய்துவிட்டு உடலை ஆட்டோவில் வைத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து மகேஷ் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். லாரியில் பேட்டரி திருடியதால் முரளியை அடித்து கொன்றதாக தெரிவித்து உள்ளனர்.

மகேஷ் தனக்கு சொந்தமான லாரியை கடந்த கடந்த 6-ந் தேதி இரவு பட்டாபிராம் அருகே சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைத்திருந்தார். நள்ளிரவில் ஆட்டோவில் வந்த முரளி அந்த லாரியில் பேட்டரியை திருடி இருக்கிறார்.

அந்த நேரத்தில் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மகேஷ், அருள் குமார், சம்பத் ஆகியோர் சேர்ந்து முரளியை கண்டித்து தாக்கினர்.

இதில் அவர் இறந்து விட்டதால் உடலை ஆட்டோவில் வைத்து சாலை யோரத்தில் நிறுத்தி தப்பி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News