செய்திகள்
குழந்தை

திருச்சி அருகே கழிப்பறையில் குழந்தையை வீசிச்சென்ற தாய்

Published On 2019-09-18 13:31 GMT   |   Update On 2019-09-18 13:31 GMT
திருச்சி அருகே கழிப்பறையில் பிறந்த குழந்தையை தாய் வீசிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டால்மியாபுரம்:

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி கல்லக்குடி அருகே உள்ள கே.கே.நகர் பகுதியில் பொதுகழிப்பறை உள்ளது. இன்று காலை பொதுமக்கள் அங்கு சென்றபோது , ஒரு பகுதியில் இருந்து குழந்தையின் அழு குரல் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சத்தம் வரும் பகுதிக்கு சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை கிடந்தது.

அதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன், உடனடியாக கல்லக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் குழுவினரும்  வரவழைக்கப்பட்டனர். டிரைவர் அண்ணாத்துரை மற்றும் மருத்துவஉதவியாளர் தனுசியா ஆகியோர் குழந்தைக்கு  முதலுதவி சிகிச்சை அளித்தனர். 

பின்னர் திருச்சி சைல்டு லைன் உறுப்பினர்கள் கல்பனா, முரளி ஆகியோர் உதவியுடன் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழிப்பறையில் குழந்தையை வீசிச்சென்ற தாய் யாரென்று தெரியவில்லை. தகாத உறவால் பிறந்ததால் குழந்தையை வீசி சென்றிருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாயை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News