செய்திகள்
வயலில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்.

பெரம்பலூர் அருகே காற்றில் சாய்ந்த மின்கம்பம் சரிசெய்யப்படுமா?: விவசாயிகள் கோரிக்கை

Published On 2019-09-05 16:38 GMT   |   Update On 2019-09-05 16:38 GMT
பெரம்பலூர் அருகே கடந்த வாரம் வீசிய காற்று , மழைக்கு சாய்ந்த மின் கம்பத்தை சரி செய்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே உள்ளது எசனை கிராமம். இந்த கிராமத்தில் கடந்த வாரம் வீசிய காற்று, மழைக்கு ஈடுகொடுக்க முடியாமல், எசனை வடக்குப்பகுதி மின் மாற்றிக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகளின் வயல்களில் இருந்த 2 மின்கம்பங்கள் வீழ்ந்தன. இதனால் மின் கம்பிகளும் அறுந்து தரையில் விழுந்தன. 

இது குறித்து விவசாயிகள் எசனையில் உள்ள மின்வாரிய கிளை அலுவலத்தில் தகவல் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் அறுந்துகிடக்கும் மின் கம்பிகளை அகற்றவோ, முறிந்து விழுந்த மின் கம்பங்களை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பங்களை நட்டு மின்வினியோகம் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இது குறித்து விவசாயிகள் மின்வாரிய புகார் எண் 1912  மற்றும் 9486111912 ஆகியவற்றிற்கு தகவல் தெரிவித்தும் எவ்வித  நடவடிக்கையும் எடுக்க படவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 10 நாட்களாக மின்சாரம் இல்லாமல் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர், கொடுக்க  முடியாமலும் ,பயிர்களுக்கு நீர் பாய்ச்ச  முடியாமலும் கஷ்டப்படுகிறார்கள்.

எனவே மின்வாரிய அதிகாரிகள்  உடனடியாக மின் கம்பத்தை சரி செய்து மின்சாரம் வழங்கவேண்டும் என விவசாயிகள்   கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News