செய்திகள்
குடிநீர் தட்டுப்பாடு

கொடைக்கானலில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

Published On 2019-09-02 12:30 GMT   |   Update On 2019-09-02 12:30 GMT
கொடைக்கானலில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையினால் போதிய அளவு மழை பெய்யவில்லை. இருநதபோதும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கொடைக்கானலில் சில நாட்கள் கன மழை பெய்தது.

இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கொடைக்கானல் அண்ணா நகரில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இன்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் கல்லறை மேடு பகுதியில் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தற்காலிகமாக இன்று லாரி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், வழக்கம் போல் இனிமேல் தண்ணீர் சீராக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

இதனையடுத்து சுமார் 30 நிமிடம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

Tags:    

Similar News