செய்திகள்
தற்கொலை

தென்தாமரைகுளம் அருகே குடும்பத்தினரை மிரட்டுவதற்காக தூக்கில் தொங்கியவர் பலி

Published On 2019-08-27 13:55 GMT   |   Update On 2019-08-27 13:55 GMT
தென்தாமரைகுளம் அருகே புரோட்டா பங்கு வைப்பதில் தகராறு ஏற்பட்டதில் குடும்பத்தினரை மிரட்டுவதற்காக தூக்கில் தொங்கியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்தாமரைகுளம்:

தென்தாமரைகுளம் அருகே உள்ள கோவில் விளையைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 54). இவருக்கு சதீஷ் (24), லிங்கராஜா (22) என்ற 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சந்திரசேகரும், அவரது மகன்களும் தேங்காய் உறிக்கும் தொழில் செய்து வந்தனர். நேற்று இரவு சாப்பாட்டுக்காக கடையில் இருந்து புரோட்டா வாங்கினர். அதை பங்குவைத்து சாப்பிடுவதில் சதீசுக்கும், அவரது தம்பி லிங்கராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சதீஷ் அணிந்திருந்த தங்கச்சங்கிலி அறுந்து விழுந்தது. 

இதனால் சதீஷ் மன வேதனை அடைந்தார். கோபித்துக்கொண்டு ஒரு அறைக்குள் ஓடிய சதீஷ், அங்கு தாயாரின் சேலையில் தூக்குப்போட்டு தொங்கினார். சந்தேகத்தில் அவரது குடும்பத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு சதீஷ் தூக்கில் தொங்கிய படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு கொட்டாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுபற்றி தென்தாமரை குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சதீசின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சதீஷ் குடும்பத்தினரை மிரட்டுவதற்காக தூக்கில் தொங்குவது போல் நடித்து இருக்கலாம் எனவும், ஆனால் எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை முழுவதுமாக இறுக்கி இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
Tags:    

Similar News