நிலக்கோட்டை வைகை ஆற்றில் மீண்டும் மணல் திருட்டு
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், அணைபட்டி வைகை ஆறு நடகோட்டை முதல் சித்தனை வரை ஏழு கிலோ மீட்டர் தூரம் சுமார் 170 குடி நீருக்கான உறை கேணிகள் உள்ளது.
இவை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்கள் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தற்போது மணல் கொள்ளையர்களால் சுமார் 20 அடிக்கு மேல் அணைபட்டி, விளாம்பட்டி பகுதிகளில் மணலை எடுப்பதால் இது குறித்து மாவட்ட கலெக்டர், கனிமவள துறை, பொதுப்பணி துறை, வருவாய்துறை அலுவலர்களுக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால் மணல் கொள்ளை நடைபெறும் இடத்தை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள் சில நாட்கள் மட்டும் கண்துடைப்பாக நடவடிக்கை எடுத்தனர். ஆனால் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது.
மேலும் தற்போது மணல் கொள்ளையர்களால் கிழக்கே போகும் வைகையை மேற்கே பாயும் வைகையாக புதிதாக தடத்தை உருவாக்கியுள்ளார்கள். இது போன்ற கொள்ளை தடுக்கப்படாவிட்டால் மணல் மாபியாக்களால் ஆறு பாலைவனமாக மாறும் நிலை ஏற்படும். இதை நம்பிய 300 கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படும். மணல் கொள்ளையர்களால் வைகை காணாமல் போய் விடும். எனவே அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.