கிருஷ்ணர்- அர்ஜூனன் சூழ்ச்சியால் பா.ஜனதா வென்றதை ரஜினி ஏற்கிறார்- சீமான் பேட்டி
ஊட்டி:
நீலகிரியை புரட்டிப்போட்ட தென்மேற்கு பருவமழையால் மாவட்டம் முழுவதும் சேதம் அடைந்தது. 5 பேர் பலியானர்கள். வீடுகளை இழந்து பலர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உயிர், உடமைகளை இழந்த குடுபத்தினருக்கு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊட்டி வந்தார். வெள்ளத்தால் உயிரிழந்த விமலா, சுசீலா ஆகியோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். கப்பத்தொரையில் சேதமான வீடு மற்றும் விவசாய நிலங்களை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மழைவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வீடு இழந்தவர்களுக்கு அரசு வீடுகட்டிக்கொடுக்க வேண்டும். ஆறு, நீரோடைகளை தூர்வாரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கோவையில் அவர் கூறியதாவது:- 370 சட்டப்பிரிவை ஜம்மு-காஷ்மீரில் ரத்து செய்தது மாநில உரிமையை பறிக்கும் செயல். மத்திய அரசு தமிழர்கள் மீதும், தமிழ் படங்கள் மீதும் பாரபட்சம் காட்டி வருகிறது.
ரெயில்வே துறையில் உணவு, பராமரிப்பு உள்ளிட்டவைகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டு விட்டது. மலைரெயில் உள்பட ரெயில்வே துறை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு விடும்.
மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர்- அர்ஜூனன் போன்றவர்கள் என்று ரஜினிகாந்த் கூறியது உண்மைதான். மகாபாரத போரில் அவர்கள் சூழ்ச்சியால் வென்றனர். அதேபோன்று மோடியும், அமித்ஷாவும் சூழ்ச்சியால் வென்றதை அவர் ஏற்றுக்கொள்கிறார். ரஜினி பா.ஜனதாவை சேர்ந்தவர் என்பதில் மாற்று கருத்து இல்லை.
எடப்பாடி பழனிசாமி இந்தியை திணிக்கமாட்டோம் என்று கூறுகிறார். ஆனால் தமிழகத்தில் 1 கோடி இந்திக்காரர்கள் ஊடுவியுள்ளனர். அதில் 70 லட்சம் பேர் இங்கேயே வாக்குரிமை பெற்று விட்டனர். இந்தி ஆதிக்கம் பெற இதுவும் ஒரு யுக்தி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்