செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே மான் வேட்டையாடியவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்
ஆண்டிப்பட்டி அருகே மான்வேட்டையாடிய 2 பேருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மேகமலை வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அரசு அறிவித்துள்ளது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லை. இருந்தபோதும் மர்மகும்பல் அவ்வப்போது மான் வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது. இப்பகுதியில் மான்வேட்டை நடைபெறுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைதொடர்ந்து மேகமலை வனத்துறையினர் மண்ணூத்து வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் இறைச்சி சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். வனத்துறையினரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை விரட்டியபோது 2 பேர் மட்டும் சிக்கினர். மேலும் அவர்கள் மான்வேட்டையாடி சமைத்தது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து மான் வேட்டையாடிய மண்ணூத்தை சேர்ந்த செல்வக்குமார், முருகன் ஆகியோரை கைது செய்து இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் இது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.