கன்னிவாடி அருகே வேன் கவிழ்ந்து பெண்கள் உள்பட 30 பேர் படுகாயம்
கன்னிவாடி:
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கோனூர் பாப்பன்குளம் பகுதியில் இருந்து ஒட்டன்சத்திரம், பெரியகோட்டை பகுதியில் உள்ள செங்கள் சூளைக்கும் கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு செல்வது வழக்கம்.
இவர்களை வேன் மூலம் அழைத்து சென்று வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் 33 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வேன் பெரியகோட்டைக்கு சென்றது. இந்த வேனை காரைக்குடியைச் சேர்ந்த பாண்டி (வயது 23) என்பவர் ஓட்டினார்.
இவர் வேனை அதிவேகமாக இயக்கியுள்ளார். இதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள் மெதுவாக செல்லுமாறு கூறியுள்ளனர். இருந்த போதும் அவர் வேகமாக சென்றதால் நவாமரத்துப்பட்டி அருகே சாலையோரம் கவிழ்ந்தது.
இதனால் உள்ளே இருந்த தொழிலாளர்கள் சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி அவர்களை மீட்டனர். இந்த விபத்தில் செல்லமணி, மாரியம்மாள், சுமதி, முத்தம்மாள், சவுடம்மாள், கல்பனா, அமுதா, காளியம்மாள், குமார், பாக்கியம், அம்பிகா, முத்துலெட்சுமி உள்பட 30 பேர் படுகாயமடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டிரைவரை தாக்க முயன்றனர். அவர் தப்பிச் சென்று போலீசில் தஞ்சமடைந்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. சீமைச்சாமி கன்னிவாடி சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா ஆகியோர் காயமடைந்தவர்களை மீட்டு கன்னிவாடி மற்றும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.