செய்திகள்
கொள்ளை நடந்த முருகன் கோவில்

குன்னம் அருகே முருகன் கோவில் பீரோவை உடைத்து நகைகள் கொள்ளை

Published On 2019-07-31 16:57 GMT   |   Update On 2019-07-31 16:57 GMT
குன்னம் அருகே முருகன் கோவில் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தை அடுத்த பெரியம்மாபாளையம் கிராமத்தில் உள்ள கரம்பியம் பிரிவு சாலையில் ஆறுபடை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இக்கோவிலின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பக்க வாட்டு அறையின் கதவின் தாழ்பாளை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கு இருந்த பீரோவை கடப்பாரையை கொண்டு உடைத்து அதில் இருந்த 8 பவுன் நகைகளை கொள்ளை அடித்தனர். பின்னர் பீரோவில் இருந்த கோவில் உண்டியல் சாவியை எடுத்து உண்டியலை திறந்து அதில் இருந்த பணம் மற்றும் வெண்கல பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இதையடுத்து நேற்று காலை கோவிலை சுத்தம் செய்ய வந்த துப்புரவு பணியாளர்கள் கோவில் உள்ளே சென்றபோது கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை கண்டு பூசாரி துரை மற்றும் தர்மகர்த்தா பாண்டியன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலின் பேரில் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. திறக்கப்பட்ட உண்டியலில் ரூ.1 லட்சம் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. 

கிராமத்தின் முக்கிய பகுதியில் உள்ள முருகன் கோவிலில் நகைகள், பணம், பொருட்கள் கொள்ளை போன சம்பவம் பெரியம்மாபாளையம் கிராம பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News