செய்திகள்
சாத்தூரில் எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு தர மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் எச்ஐபி ரத்தம் செலுத்ததப்பட்ட பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்டது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த பெண்ணின் கருவில் இருந்த குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என கருதப்பட்டது.
இதையடுத்து பிறந்து 45 நாட்களே ஆன நிலையில் குழந்தைக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. ரத்த மாதிரிகள் சென்னை கிண்டியில் உள்ள ஆய்வு மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் அந்த குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சாத்தூரில் பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரில் ரூ. 10 லட்சமும், இரு குழந்தைகள் பெயரில் ரூ. 15 லட்சமும் வங்கியில் செலுத்த உத்தரவிட்டுள்ளனர். மேலும் 450 சதுர அடிக்கு குறையாமல் இரு படுக்கையறை வீடு கட்டித்தரவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.