search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்ஐவி ரத்தம்"

    எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு எய்ட்ஸ் இல்லை என்று மதுரை ஆஸ்பத்திரி டீன் தெரிவித்துள்ளார். #HIVBlood
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்டது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த பெண்ணின் கருவில் இருந்த குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என கருதப்பட்டது.

    இதையடுத்து பிறந்து 45 நாட்களே ஆன நிலையில் குழந்தைக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. ரத்த மாதிரிகள் சென்னை கிண்டியில் உள்ள ஆய்வு மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் அந்த குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.



    இதுதொடர்பாக சாத்தூர் பெண் கூறும்போது, என் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இல்லை என்று டாக்டர்கள் கூறி உள்ளனர். இதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எங்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு மருத்துவத்துறை டாக்டர்கள் கூறும் போது, சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு ஓராண்டு, 18 மாதங்கள் என்கிற இடைவெளியில் ரத்த பரிசோதனைகள் நடத்தப்படும். அதில் கிடைக்கப்போகும் விவரங்களின் அடிப்படையில் தான் அந்த குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து உறுதியாக தெரிவிக்க இயலும்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் வனிதாவிடம் கேட்ட போது, சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு நடத்தப்பட்ட முதல் கட்ட பரிசோதனையில் எய்ட்ஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. அந்த குழந்தையின் உடல் எடையும் தற்போது 3.2 கிலோ என்கிற அளவில் அதிகரித்து உள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர். எனவே சாத்தூர் பெண் அடுத்த வாரம் குழந்தையுடன் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றார். #HIVBlood
    2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக 1 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தருமாறு கோவை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு, சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். #CoimbatoreGovtHospital
    கோவை:

    திருச்சி மணப்பாறையை சேர்ந்த தம்பதியினர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களது 2 வயது மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குழந்தைக்கு ரத்தம் ஏற்றி சிகிச்சை அளித்தனர்.

    இந்நிலையில் குழந்தையை மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு தவறுதலாக ஏற்றப்பட்ட ரத்தத்தால் தான் குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.

    இந்த குற்றச்சாட்டை அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் மறுத்துள்ளார்.

    சிறுமிக்கு வேறு எங்காவது சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கலாம், அப்போது தவறு நடந்திருக்கலாம் என அவர் கூறினார். இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து 1 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தருமாறு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு நிர்வாகத்துக்கு, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    அதன் பேரில் ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனை நிலைய அதிகாரிகள், நர்சுகள் உள்பட பலரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். #CoimbatoreGovtHospital
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் ஏற்றியதால் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். #HIVBlood #CoimbatoreGovtHospital
    கோவை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 9 வருடமாக திருப்பூரில் தங்கி அங்குள்ள தறிப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் அந்த வாலிபர் தனது மனைவியுடன் திருப்பூரில் வசித்து வருகிறார்.

    இந்த தம்பதிக்கு கடந்த 6.2.17 அன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இரு குழந்தைகளும் எடை குறைவாக இருந்ததால் 32 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

    பின்னர் வீட்டில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். கடந்த 11.7.18 அன்று பெண் குழந்தைக்கு சளி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. உடனே குழந்தையை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஆபத்தாக உள்ளது என கூறி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இருதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறி உள்ளனர். மேலும் ரத்தம் ஏற்றி உள்ளனர்.

    தற்போது அக்குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து குழந்தையின் தந்தை கூறியதாவது-

    எனது பெண் குழந்தைக்கு இருதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறி கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் ஏற்றினார்கள். அப்போது நான் மட்டும் தான் குழந்தையுடன் இருந்தேன். எனது மனைவி வெளியே சென்று இருந்தார்.

    அந்த சமயத்தில் ரத்தம் ஏற்றிய ஒரு டாக்டர் வெளியே சென்று விட்டார். அங்கு வந்த மற்றொரு டாக்டர் ரத்த பாட்டிலை எடுத்து விட்டார்.

    இது குறித்து நான் கேட்ட போது இது வயதானவர்களுக்கு உரிய ரத்தம். அதனை மாற்றி ஏற்றி விட்டனர் என கூறினார். குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்த 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்தனர்.

    குழந்தையின் இருதயத்தில் ஓட்டை இருப்பதாக கூறினீர்கள். ஆனால் 3 நாளில் டிஸ்சார்ஜ் செய்து விட்டீர்களே என நான் கேட்டேன். பின்னர் நாங்கள் ஒரு வாரம் புறநோயாளியாக குழந்தைக்கு சிகிச்சை பெற்றோம்.

    கடந்த 3 மாதத்துக்கு முன் குழந்தையின் காது, உடம்பில் கட்டி வந்தது. அம்மை நோய் தாக்கி இருக்கலாம் என கருதி மருந்து கொடுத்தோம். ஆனால் குணமாகவில்லை. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 6-ந் தேதி குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தோம்.

    குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக தெரிவித்தனர். எனவே எங்கள் 3 பேருக்கும் எச்.ஐ.வி. தொற்று இருக்கிறதா? என பரிசோதனை செய்தனர்.



    ஆனால் எங்களுக்கு தொற்று இல்லை என தெரிவித்தனர். ஆனால் அதற்கான சான்றிதழை கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் 3 பேரும் தனியாக பரிசோதனை செய்தோம்.

    அதில் எங்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. எங்களுக்கு இல்லாதபோது குழந்தைக்கு மட்டும் இந்த தொற்று எப்படி ஏற்பட்டது?

    குழந்தை பிறந்த திருச்சி அரசு ஆஸ்பத்திரி தவிர மற்றபடி நாங்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை அளித்துள்ளோம். குழந்தைக்கு அங்கன் வாடி மையத்தில் தடுப்பூசி மட்டும் தான் போட்டு உள்ளோம்.

    இது தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் கொடுக்க சென்ற போது புகாரை வாங்க மறுத்து விட்டனர். இதனால் மனித உரிமை அமைப்பு, மக்கள் கண்காணிப்பகத்தை நாடினேன்.

    குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைக்கு உயர் ரக சிகிச்சை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஆசீர் வாதம், நிக்கோலஸ், வக்கீல் சாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

    இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் கூறியதாவது-

    குழந்தைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் ஏற்றப்பட்டது உண்மைதான். ரத்த சிகப்பணு மட்டுமே ஏற்றப்பட்டது. இதனால் எச்.ஐ.வி. பரவாது.

    குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்ட ஆவணங்களை சரி பார்த்த போது எந்த வித தொற்றும் இல்லை என்பது தெரிய வந்தது.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தான் குழந்தையின் ரத்தத்தை பரிசோதனை செய்து எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதை கண்டறிந்து பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார்.

    குழந்தைக்கு வேறு எங்காவது சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்பதை விசாரித்தால் தான் உண்மை தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #HIVBlood #CoimbatoreGovtHospital
    சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதை கண்டித்து தி.மு.க. மருத்துவ அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சென்னை:

    சிவகாசி அரசு மருத்துவமனையில் ஏழை கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் தி.மு.க. மருத்துவ அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மருத்துவ அணி மாநில தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கனிமொழி, தாயகம் கவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதற்கு பொறுப்பு ஏற்று சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ அணி மாநில தலைவர் டாக்டர் பூங்கோதை பேசியதாவது:-

    சிவகாசி அரசு மருத்துவமனையில் சாத்தூரை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சுகாதாரத்துறையின் பொறுப்பற்ற செயல்களால் தான் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது.

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதற்கு பொறுப்பு ஏற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியால் மக்கள் பல்வேறு அவதிப்பட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நிர்வாகத்திறன் அற்ற ஆட்சியாக செயல்படுகிறது. விரைவில் தி.மு.க. ஆட்சி உருவாகும். மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி தமிழகத்துக்கு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை அறிக்கை கிடைத்ததும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #MinisterVijayabaskar #HIVBlood
    சென்னை:

    சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உறுப்பினர்கள் பேசினார்கள்.

    வி.பி.பரமசிவம் (அ.தி.மு.க.):- 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட நிகழ்வு இதுபோல் இனி வேறு எங்கும் நடைபெறக் கூடாது. இந்த தவறுக்கு அரசு நிர்வாகம் காரணமா? அல்லது தனிப்பட்ட நபர்களின் கவனக்குறைவு காரணமா? என்னைப் பொறுத்தவரை லேப் டெக்னீசியன் மற்றும் கண்காணிப்பாளரின் குறைபாடுகளால் நடந்திருக்கலாம் என கருதுகிறேன்.

    ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது. 8 லட்சம் பேர் ரத்த தானம் செய்கிறார்கள். இதில் பரிசோதனை செய்கிற ‘கிட்’டில் குறை இருக்குமோ? என்ற ஐயப்பாடு எழுகிறது. இதே போன்ற ஒரு நிகழ்வு கேரளாவிலும் நடந்துள்ளது.

    இனி வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சாத்தூர் ராமச்சந்திரன் (தி.மு.க.):- கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட வி‌ஷயத்தில் எங்கே தவறு நடந்துள்ளது என்பதை அரசு தீவிரமாக ஆராய்ந்து இனி வரும் காலங்களில் தவறு ஏற்படாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும்.

    இதில் ரத்தம் கொடுத்த அந்த நபர் மனசாட்சி உள்ளவராகவே தெரிகிறது. ஏனென்றால் அவரே முன் வந்து தனது ரத்தத்தில் எச்.ஐ.வி. உள்ளதாக தனியார் ஆய்வகத்தில் கூறி இருக்கிறார். எனவே எனது ரத்தத்தை வேறு யாருக்கும் செலுத்த வேண்டாம் என்று தானே ஆஸ்பத்திரிக்கு வந்து சொல்லி இருக்கிறார்.

    அதன் பிறகுதான் வி‌ஷயம் வெளியே தெரிய வந்துள்ளது. அவரைப் பற்றிய செய்தியும், படமும் வெளியே வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். அவருக்கு தகுந்த கவுன்சிலிங் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர் வி‌ஷம் குடித்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இப்போது அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் பெற்றெடுக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி. வர வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். அது போக போகத்தான் தெரியும்.

    இந்த பெண் வாழ்நாள் முழுவதும் எச்.ஐ.வி. பாதித்த பெண்ணாகதான் இருப்பார். சமுதாயத்தில் அவருக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும். மற்றவர்கள் வேலை கொடுக்க கூட யோசிப்பார்கள். எனவே அரசு உரிய நிவாரணம் வழங்கி தேவையான மருத்துவ வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

    கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):- இதில் தவறு செய்ததாக லேப் டெக்னீசியன் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்து கூறியதாவது:-

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட வி‌ஷயம் தெரிந்ததும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தீவிரமாக விசாரிக்கப்பட்டனர். அரசு செயலாளர் தலைமையில் விசாரணை மேற்கொண்டோம்.

    அதில், எச்.ஐ.வி. ரத்தம் வழங்கியவர் ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பும் ரத்தம் கொடுத்து இருந்தவர். அவருக்கு எச்.ஐ.வி. இருந்தது தெரிந்தும் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் பெங்களூரில் இருப்பதாக தகவல் தெரிவித்து விட்டார்.

    அதன் பிறகு அவரை தொடர்ந்து கண்காணிக்க முடியாமல் போனதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதில் லேப் டெக்னீசியன் உள்பட 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்தனர். அதன் பிறகு நிரந்தரமாக இப்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இன்னும் யார் யாரெல்லாம் கண்காணிக்க தவறினார்கள் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் மாதவி தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    அவர் விரைவில் அறிக்கை தருவார். அதில் தவறு இழைத்தவர்கள் உயர்பதவியில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர்கள், நர்சு என யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

    தற்போது கர்ப்பிணி பெண்ணுக்கு 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். இனி இது போன்று தவறு ஏற்படாமல் இருக்க ரத்த பரிசோதனையை துல்லியமாக கண்டுபிடிக்கும் வகையில் ரூ.2 கோடி மதிப்பில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புதிய மருத்துவ கருவி நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் ‘ஐ.டி. நாட்’ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.



    மு.க.ஸ்டாலின்:- இதில் கீழ்மட்ட ஊழியர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- விசாரணை குழுவின் அறிக்கை கிடைத்ததும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். #MinisterVijayabaskar #HIVBlood

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக சுகாதார துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #HCMaduraiBench #HIVBlood #SatturPregnantwoman
    மதுரை:

    மதுரையை சேர்ந்த அப்பாஸ்மந்திரி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டார்.

    அவருக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரத்தம் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிய வந்தது.

    தற்போது அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மன உளைச்சலால் அவதிப்படும் அவருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.


    மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் ரத்ததானம் பெறுவதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து தமிழக சுகாதார துறை செயலாளர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். #HCMaduraiBench #HIVBlood #SatturPregnantwoman
    சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தி உயிரோடு விளையாடும் அதிமுக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, தி.மு.க. மருத்துவ அணி சார்பில் 5-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. #dmk #pregnantwoman #hivblood

    சென்னை:

    தி.மு.க. மருத்துவ அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, செயலாளர் என்.வி.என்.சோமு கனிமொழி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தாலும், ஏற்கனவே தமிழகம் முழுவதும் உயிர் கொல்லி நோயான “டெங்கு” மற்றும் “பன்றிக்காய்ச்சல்” காரணமாக பலர் மரணமடைந்தனர்.

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாத்தூரைச் சேர்ந்த ஏழை கர்ப்பிணிப் பெண்ணுக்கு உயிர்கொல்லி நோயானா எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்தி, அந்த ஏழை கர்ப்பிணி பெண்ணின் வாழ்க்கையையே பலி வாங்கியுள்ளது.

    தொடர்ந்து ஏழை, எளிய தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் ஆளும் அ.தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, வருகிற 5-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தி.மு.க. மருத்துவ அணியின் சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #dmk #pregnantwoman #hivblood    

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நலம் சீராக உள்ளதாக மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் தகவல் தெரிவித்துள்ளார். #MaduraiGovernmentHospital #pregnantwoman #hivblood

    மதுரை:

    சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். அவர் வழக்கமான பரிசோதனைக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்று வந்தார்.

    அப்போது அவருக்கு ரத்த சோகை இருப்பது தெரியவந்தது. எனவே சிவகாசி அரசு ஆஸ்பத் திரியில் இருந்து ரத்தம் கொண்டு வந்து செலுத்தினர்.

    அதன் பின்னர் கர்ப்பிணியின் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கமுதி வாலிபர் வழங்கிய ரத்தத்தை செலுத்தியதில் எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது.

    எச்.ஐ.வி. பாதித்த கர்ப்பிணியை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தனி வார்டில் 9 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    கர்ப்பிணியின் உடல் நிலை குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    எச்.ஐ.வி. பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு 9 டாக்டர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளிக்கிறது.

    நோய் தடுப்பு மருந்துடன் சத்து மாத்திரைகளும் வழங்கப்படுகிறது. மேலும் கருவில் இருக்கும் சிசு பாதிக்கப்படாமல் இருக்க மருந்து வழங்கப்படுகிறது.

    தொடர் சிகிச்சையின் காரணமாக கர்ப்பிணியின் உடல் நலம் சீராக உள்ளது. தொடர்ந்து அவரது உடல் நிலையை கவனித்து வருகிறோம்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #MaduraiGovernmentHospital #pregnantwoman #hivblood

    விருதுநகர் மற்றும் சென்னை பெண்களுக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து அறிக்கை அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. #HIVBlood #PregnantWoman #TNGovernment
    புதுடெல்லி:

    விருதுநகர் மாவட்டத்தில் 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் ரத்த வங்கி ஊழியர் அந்த ரத்தத்தை ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் முன்பு பரிசோதனை செய்யவில்லை என்றும், அந்த ரத்தம் பாதுகாப்பானது என குறிப்பு ஒட்டப்பட்டு இருந்ததால் ஆஸ்பத்திரியிலும் பரிசோதனை செய்யாமல் கர்ப்பிணிக்கு செலுத்தியதும் தெரிந்தது.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதோடு அனைத்து ரத்த வங்கிகளில் உள்ள ரத்தத்தையும் ஆய்வு செய்யும்படியும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதேபோல சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக 27 வயது பெண் புகார் கூறியுள்ளார்.

    இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த 2 சம்பவங்களும் மிகவும் வருத்தத்திற்குரியது. இந்த பிரச்சினை குறித்து நீங்கள் விசாரணை நடத்தி, விரைவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #HIVBlood #PregnantWoman #TNGovernment
    எச்.ஐ.வி. பாதித்த பெண்ணுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். #ministerrajendrabalaji #HIVBlood #PregnantWoman

    மதுரை:

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிக்கு ஆறுதல் கூறினார். பின்னர் தனது சொந்த பணத்தில் ரூ.2 லட்சம் வழங்கினார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சாத்தூர் படந்தாலில் அரசு நிலம் வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக விருதுநகர் கலெக்டரிடம் பேசி அவர் கேட்ட பகுதியிலேயே இடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிகிச்சை முடிந்து அந்த பெண் வீடு திரும்பியதும் அவரது கணவருக்கு டிரைவர் வேலையும், பெண்ணுக்கு தகுந்த வேலையும் வழங்கப்படும் என்றார். #ministerrajendrabalaji  #HIVBlood #PregnantWoman

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரம் தொடர்பாக மேச்சேரி பெண்ணின் கணவர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

    அப்போது ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்ட ரத்தம் அந்த பெண்ணுக்கு செலுத்தப்பட்டது.

    2015-ம் ஆண்டு மீண்டும் கர்ப்பமடைந்த அந்த பெண் மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்காக சென்றார். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து, அந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி. பாதிப்பினை கட்டுப்படுத்தும் வகையில் ஓமலூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அந்த பெண்ணின் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர், மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதிக்கப்படாத ரத்தம் செலுத்தப்பட்டதால் தான் தனது மனைவிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று கோரிக்கை விடுத்தார்.

    ஏற்கனவே விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு பெண்ணுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளவரின் ரத்தம் ஏற்றப்பட்டு, அந்த ரத்தத்தை தானமாக வழங்கியவர் தற்கொலை செய்தார்.

    இந்த நிலையில் மேச்சேரியிலும் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவரின் ரத்தம் ஒரு பெண்ணுக்கு ஏற்றப்பட்ட சம்பவம் நேற்று தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மாவட்ட சுகாதார பணிகள் துறை உயர் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணிையை சந்தித்து மனு கொடுக்கிறார். அந்த மனுவில், தனது மனைவிக்கு எச்.ஐ.வி. பாதித்த ரத்தத்தை மேச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதிக்காமல் ஏற்றியதே காரணம் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    கர்ப்பிணியாக இருந்த போது எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். #HIVBlood #PregnantWoman

    விருதுநகர்:

    விருது நகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சென்னையை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில் 3-வதாக சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கும் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

    மேச்சேரி அருகே உள்ள குதிரைகாரன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த 26 வயது பெண் காதல் திருமணம் செய்தவர். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

    கடந்த 2014-ம் ஆண்டு கர்ப்பமாக இருந்தபோது, பரிசோதனை செய்ய மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வந்தார்.

    அப்போது, அவருக்கு ரத்தம் குறைவாக உள்ளதாக கூறி, டாக்டர்கள் ரத்தம் ஏற்றி உள்ளனர். சில நாட்களிலேயே அவருக்கு தலை சுற்றல், உடல் அரிப்பு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது.

    இது குறித்து அவர் டாக்டர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் புது ரத்தம் ஏற்றினால் அதுபோல பாதிப்புகள் வருவது சகஜம் என கூறி உள்ளனர். பின்னர் அவருக்கு குழந்தை பிறந்தது.

    2015-ம் ஆண்டு மீண்டும் அவர் கர்ப்படைந்தார். இதையடுத்து அவர் மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து டாக்டர்கள் அவருடைய கணவரை அழைத்து மருத்துவ பரிசோதனை செய்தனர். ஆனால், அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியர் இதற்கு டாக்டர்கள் மற்றும் ஊழியர்களே பொறுப்பு. இது குறித்து உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவோம் என கூறினர்.

    அப்போது அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள், இதனை வெளியில் கூறினால் உங்களுக்குத் தான் அவமானம். உங்களை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்து விடுவார்கள் என மிரட்டியதாக தெரிகிறது. பின்னர் மாதந்தோறும் அரசு வழங்கும் ரூ.1000 உதவித் தொகை பெற்றுத் தருவதாக கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே 2-வது குழந்தையும் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லாமல் பிறந்தது. அதன் பிறகு மாதந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது அக்கம், பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அவரது குடும்பத்தை ஓதுக்கி வைத்தனர். அவர்களது குழந்தைகளுடன் பக்கத்து வீட்டு குழந்தைகள் கூட விளையாட மறுத்தனர்.

    தற்போது குடும்பத்துடன் தனது விவசாய நிலத்தில் உள்ள கூரை வீட்டில் கணவன் -மனைவி இருவரும் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலட்சியப்போக்குடன் எச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றிய டாக்டர்கள் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் கொடுத்த நபரை கண்டறிந்து, அவர் வேறு எங்கும் ரத்தம் கொடுக்காத வகையில் தடுக்க வேண்டும் என்று இப்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கூறும்போது, “தவறு செய்த அதிகாரிகள் மீதும், ரத்தம் கொடுத்தவர் மீதும் உரிய நடவடிக்கை வேண்டும்” என்றார்.

    இந்த சம்பவம் பற்றி சேலம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் டாக்டர். பூங்கொடி கூறும் போது, “மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து யார்-யாருக்கெல்லாம் ரத்தம் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார். #HIVBlood #PregnantWoman

    ×