தஞ்சையில் கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
தஞ்சாவூர்:
தஞ்சை இ.பி.காலனி ஆரோக்கியநகரை சேர்ந்தவர் மதியழகன் (வயது 23). இவர் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.டெக் படித்து வருகிறார். இவர் நேற்று அண்ணாநகர்- நாஞ்சிக்கோட்டை ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவர் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பையை எடுத்து சென்று விட்டனர். அதில் மதியரசன் ரூ.5 ஆயிரம் வைத்திருந்தார். திரும்பிவந்த மதியரசன் பணப்பை திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தஞ்சை தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணப்பை திருட்டுப்போன இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை சோதனையிட்டபோது அதில் 3 வாலிபர்கள் பணத்தை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
அந்த படக்காட்சியின் மூலம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தஞ்சை காசவளநாடு பகுதியை சேர்ந்த அருண்குமார் (25), கீழவஸ்தாசாவடியை சேர்ந்த மாணிக்கம் (22), ஜெய்கணேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து தீவி விசாரணை நடத்தி வருகின்றனர்.