செய்திகள்
வானிலை நிலவர வரைபடம்

தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

Published On 2019-07-19 08:41 GMT   |   Update On 2019-07-19 08:41 GMT
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அதனையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

பருவ மழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தென் மேற்கு பருவ மழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதியில் வேகமான மழை பெய்யும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்ன கல்லாரில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

வால்பாறை, கடலூர் தலா 9 சென்டி மீட்டர், ஜெயகொண்டம் 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

தென் மேற்கு பருவ மழை நெல்லையில் 19 செ.மீ. குறைவாக இருந்தது. நேற்று நல்ல மழை பெய்துள்ளது. இதனால் வரும் நாட்களில் சராசரி மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கியதால் வடகிழக்கு பருவ மழை தாமதமாக தொடங்கும் என்று சொல்ல முடியாது. அதற்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. தென் மேற்கு பருவ மழை செப்டம்பர் வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News