செய்திகள்
கைது (கோப்பு படம்)

ரூ.3 லட்சம் இன்சூரன்ஸ் தருவதாக கூறி ராணுவ வீரரிடம் ஆசைகாட்டி ரூ.45 ஆயிரம் நூதன மோசடி - 3 பேர் கைது

Published On 2019-07-04 09:49 GMT   |   Update On 2019-07-04 09:49 GMT
காஷ்மீரில் பணியாற்றிய ராணுவ வீரரிடம் ரூ.3 லட்சம் இன்சூரன்ஸ் தருவதாக கூறி ஆசைகாட்டி ரூ.45 ஆயிரம் நூதன மோசடி செய்த 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் சரவணகுமார். ஜம்மு காஷ்மீர் ரஜோரியில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் சென்னையிலிருந்து பேசுவதாகவும் உங்களுக்கு 3 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் கிடைத்து உள்ளது. நீங்கள் ரூ 35 ஆயிரம் கட்டினால் உடனே இன்சூரன்ஸ் தருவதாகவும் கூறினார்.

இதை உண்மை என்று நம்பிய சரவணகுமார் ரூ.35 ஆயிரம் கட்டி உள்ளார். பின்னர் மோசடி டாக்குமென்ட் சார்ஜ் என்று ரூ.10,ஆயிரம் கட்ட சொல்லி உள்ளனர். அதையும் சரவணகுமார் கட்டினார்.

இதையடுத்து ஏ.டி.எம். கார்டு போன்ற ஒரு கார்டை மட்டும் அவர்கள் கொடுத்தனர். அது போலியானது என்பது தெரிந்தது. செல்போனில் அழைத்த நபரை தொடர்பு கொண்ட போது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரவணகுமார், சென்னை வந்தார். அவர் தான் பணம் செலுத்திய மோசடி நபர்களின் வங்கி கணக்கு விபரத்தை நுங்கம்பாக்கம் போலீசாரிடம் கொடுத்தார்.

வங்கியில் இருந்து தகவல்களை பெற்ற போலீசார், மோசடியில் ஈடுபட்ட நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தனியார் மார்க்கெட்டிங் நிறுவன ஊழியர்கள் கார்த்திக், சத்திய நாராயணன், கனிமொழி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள நிறுவன உரிமையாளர் ஆறுமுகத்தை தேடி வருகின்றனர் .

அவர்கள் இதேபோல் வேறு யாரையும் ஏமாற்றி உள்ளனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News